Monday, 1 February 2010

இயற்கையை புசி. தாயை நேசி.


தேடுவாய் நீ மானிடா..!


மானிடா !
எதைத் தேடுகிறாய் -அதுவும்
எங்கே தேடுகிறாய்?

எங்கிருந்து வந்தேன்
எங்கே செல்வேன்-தெரிந்து
என்ன பயன்-அதற்காய்
அலைவதற்கா இந்த மானிட பிறப்பு.

இல்லாத ஊருக்கு
செல்லாத வண்டியை-செலுத்த
நினைத்து மனிதா
ஏனிந்த ஓட்டம் !

கண்ணுக்குள் வலையை கட்டி
கனவுலகில் வாழ்கிறாய்.
அமாவாசையில் பௌர்ணமி தேடி
ஆடி அலைகிறாய் !

கட்டிலிலும் கரன்சியிலும்
புரள்வதால் மட்டும்
நிறைந்து விடுமா?
இந்த மானுட வாழ்க்கை.

இந்த பூமிக் கல்லறையில்
மண்ணுக்கும் மதுவுக்கும்
பொன்னுக்கும் பெண்ணுக்கும்
கேடாய் அலைந்தான் என்றா
உன் சரித்திரம்
நாளை சொல்லப்பட வேண்டும்.

கடவுளைத் தேடி
கன தூரம் ஓடுகின்றாய்
காசைக் கொடுத்து
கணக்காய் திரும்புகின்றாய்

படைப்பவன் பிரம்மன்
எனில்-உனைப்
படைத்தவள் தாய் தானே?

நினைவில் கொள்ள
நீ மறந்ததால் தானே
"முதியோர் இல்லங்கள்"

உனக்கு முன்னே
ஓராயிரம் இன்பங்கள்-நீ
உணர்ந்து கொண்டுள்ளாயா?

கரன்சிக்காக வீணாக்கும்
காலத்தையும்,இளமையையும்
கணக்கெடுத்துப் பார்
கதை புரியும் உனக்கு..!

வாழ்க்கையோடு வாழாமல்
வாழ்க்கையை
வா.ழ்.ந்.து....பார்..!


வலி தெரியும்.
வாலிபம் புரியும்.
வானமும் உனக்கு வசப்படும்.

அன்பைத் தேடு.
அரவணைத்து வாழ்.

இயற்கையை புசி.
தாயை நேசி.
இன்புற்று வாழ்வாய்.

அந்த நாள் வராதோ...

மாண்புமிகுக்களே...!


நேற்று வரை நீங்கள்
அரசனாய் ...
அரிதாரம் பூசிக் கொண்டு.

மறந்தும் கூட
மக்களை (உங்கள் வாரிசுகளை அல்ல )
நினைக்கவில்லை.

திக்கெட்டும் தோரணங்கள் ..
தெருவெல்லாம் பஜனைகள்...
உலகே உங்களுக்கு எனும்
ஒப்பாரிக் கூட்டங்கள்.

இந்தியாவில்
நீங்கள் விட்டு வைத்தது
இமயமலையும் தாஜ் மகாலையும் தான்.

தண்ணீருக்கும் ரேசனுக்கும்
நாங்கள் தவித்திருக்க
உங்களின் வெளி நாட்டுச் சொத்து
விக்டோரியா ராணிக்கும் மேல் !

ஜனநாயகச் சாம்பலை
பூசிக்கொண்டு நீங்கள்
சர்வாதிகாரிகளாய் ...

அரிதாரம்
'ஐந்து ஆண்டுகள்' மட்டுமே
என்பதை மறந்தே போனீர்கள் !

விளைவு ?

நீதி தேவதையின்
வாசலில் நெருக்கியபடி
முன் ஜாமீன் கேட்டு
முதல்வர் முதற்கொண்டு..

உங்களுக்குக் கிடைக்கும்
தண்டனைகள் அடுத்து வரும்
மாஜிக்களுக்குப் பாடமாக அமையட்டும்.

தண்டனைச் சிறையில்
அவமானச் சேற்றில் சிக்கி
உங்களின் அகங்காரமும்
ஆணவமும் அழிந்து படட்டும்.

அந்த நாள்
விரைவில் வராதோ....?.